metro rail travel in rs.5 on Chennai
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு டிசம்பர் 3 அன்று ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில் புயல் காரணமாக டிசம்பர் 17 ஆம் தேதியும் பிரத்யேக கட்டணத்தில் பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு டிசம்பர் 3 ஆம் தேதி (நாளை) ரூ.5 கட்டணத்தில் ரயிலில் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால் நாளை வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதன் காரணமாக நாளை சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழையும் 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்ப்பதற்கு வாய்ப்புள்ளதால் அதிகளவிலான பயணிகளால் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே நிறுவன நாளை முன்னிட்டு டிசம்பர் 3 ஆம் தேதி மட்டுமில்லாமல் டிசம்பர் 17 ஆம் தேதியும் ரூ.5 கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு டிசம்பர் 3 அன்று மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ இரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக நாளை கனமழை, புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை பயணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.
மெட்ரோ பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த பிரத்யேக கட்டணத்தில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு,
ரூ.5 என்ற பயணக்கட்டணத்தில் வருகின்ற டிசம்பர் 17 அன்றும் பயணிகள் பயணிக்கலாம்.
மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மணல் குவாரி, ஹவாலா, பி.எம். ஆபீஸ்… -கைதான ED அதிகாரி பற்றி FIR இல் புதிய தகவல்கள்!
மிக்ஜம் புயல்: 2 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
metro rail travel in rs.5 on Chennai