கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் அர்ஜெண்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு கேரளாவிற்கு வந்து ஒரு போட்டியில் விளையாடுவார்கள் என கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் இன்று (நவம்பர் 20) தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் கிரிக்கெட்டை மதம் போல் பாவித்தாலும், கேரள மக்கள் வித்தியாசமானவர்கள். அவர்களுக்குக் கால்பந்தாட்டம் தான் மதம். அதற்காக அடிதடியில் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு.
இந்நிலையில் கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் “அடுத்த ஆண்டு(2025) அர்ஜெண்டினா அணி கேரளாவில் வந்து ஒரு போட்டியில் விளையாடும். இதில் அர்ஜெண்டினா அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸியும் இடம்பெறுவார். போட்டிக்குத் தேவையான நிதியைக் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் தருவார்கள்.
இந்த போட்டிக்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பைக் கேரளா அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். போட்டி நடக்கவிருக்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். போட்டி நடக்கவிருக்கும் தேதியை அர்ஜெண்டினா கால்பந்தாட்ட கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாகப் பின்னர் அறிவிக்கும்” என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “FIFA உலகக் கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா அடுத்த ஆண்டு வருகை தர உள்ளார். இதன்மூலம் கேரளா வரலாறு படைக்க உள்ளது! மாநில அரசின் முயற்சிகள் மற்றும் ஆதரவின் காரணமாக இந்த கனவு நனவாகி உள்ளது. சாம்பியன்களை வரவேற்கவும், கால்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாடவும் தயாராவோம்” என பினராயி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2011 ஆண்டு கொல்கத்தாவில் அர்ஜெண்டினா அணியும் வெனிசுலா அணியும் மோதிக்கொண்டனர். இதில் மெஸ்ஸியும் இடம்பெற்றார்.ஆனால் இந்த போட்டி யாரும் கோல் அடிக்காத நிலையில் டிராவில்(draw) முடிந்தது.
முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து, தங்களது ஆதர்ச நாயகன் லியோனல் மெஸ்ஸியை நேரில் காண கேரள கால்பந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
UP Election : வாக்காளர்களைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்… சஸ்பெண்ட் செய்த தேர்தல் ஆணையம்!
