நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாகவும் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என காவல் துறை தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.
இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெற்றது.
அப்போது மீரா மீதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால் முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று(நவம்பர் 14) சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாகவும், அவர் தலைமறைவாக உள்ள இடம் குறித்து எந்த விபரங்களும் கிடைக்கவில்லை எனவும் அவரின் மொபைலும் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மீரா மிதுனை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருவதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். சுதாகர் தெரிவித்தார்.
தற்போது அவர் எங்கிருக்கிறார் என அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தெரியவில்லை எனவும், அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கின் விசாரணை டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவான நிலையில் மீரா மிதுன் உள்ளதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாளை(நவம்பர் 15) லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
கைலாசாவில் வேலை வாய்ப்பா? விசாரிக்கிறது போலீஸ்
ராமஜெயம் கொலை: உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடிகள் ஒப்புதல்!