தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பொறுப்பிலிருந்து அகற்றக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளது.
ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நடந்து வருகிறது. ஆளுநரைக் கண்டித்து நேற்று முன்தினம் கோவையில் திமுக கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் ஆளுநர் ரவிக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக மதிமுக தலைமை அறிவித்துள்ளது.
மதிமுக இன்று (ஜூன் 18) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ 29ஆவது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்கத்தை 20.06.2023 அன்று காலை 11 மணிக்குத் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடத்தப்படும்.
சென்னையில், தாயகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்.
அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் கோவையிலும், பொருளாளர் மு.செந்திலதிபன் கடலூரிலும், முதன்மைச் செயலாளர் துரை வைகோ தென் சென்னையிலும், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா காஞ்சிபுரத்திலும், துணைப் பொதுச்செயலாளர் ஆ.கு.மணி விழுப்புரத்திலும், துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன் திருநெல்வேலியிலும், துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் குடந்தையிலும், துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா சேக்முகமது திருச்சியிலும் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.
அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி, மக்கள் இயக்கமாக நடத்துவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
