முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில் மதிமுக மட்டும் கலந்துகொள்ளவில்லை. MDMK missing from Stalin program
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று (ஜூலை14) மாலை 6.10 மணியளவில் தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் புறப்பட்டுச் சென்றார்.
இன்று (ஜூலை 15) காலை சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், அந்த முகாம்களில் கொடுக்கப்பட்ட மனுக்களையும் பெற்றார்.

தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் இந்திய மனித உரிமைக் கட்சியை தொடங்கியவருமான மறைந்த எல்.இளையபெருமாளின் சிலையை சிதம்பரத்தில் திறந்து வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் அழகிரி, மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், எம்.பி.ரவிக்குமார், எம்.எல்.ஏ.சிந்தனை செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் மதிமுகவில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கூட இன்று சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை.
ஏற்கனவே பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியே வரும் நிலையில் இருக்கிறார் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், எல்.இளையபெருமாளின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருமாறு கூட்டணி கட்சிகளுக்கு வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் மதிமுக கலந்துகொள்ளாமல் இருந்தது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எம்.பி. பதவி வழங்காததால் அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வருத்தத்தில் இருப்பதாக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
