மயில்சாமி கடைசியாக தன்னுடன் காரில் வரும்போது நடிகர் ரஜினிகாந்த்தைச் சிவாலயத்துக்கு அழைத்துப் போக வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று கூறியதாக அவருடன் இருந்த ட்ரம்ஸ் மணி தெரிவித்தார்.
பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசி அசத்திய மயில்சாமி இன்று (பிப்ரவரி 19) காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மயில்சாமியின் உடலுக்கு திரை பிரபலங்கள் சாலிகிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மயில்சாமியின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகை கோவை சரளா அவரது உடலைப் பார்த்து மனமுடைந்து நின்ற காட்சி காண்போரைக் கலங்கச் செய்தது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை சரளா, “அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டும். நல்ல மனிதர். மனிதநேயமிக்க மனிதரைத் தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது.
நிறைந்த மனதோடு அனைவரிடமும் சகஜமாகப் பழகக்கூடியவர். அவரது மறைவு வேதனையளிக்கிறது” என கூறினார்.
அதுபோன்று நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய நகைச்சுவை நடிகர் செந்தில், “நல்ல நடிகர் மயில்சாமி. இரவுகூட அவரிடம் பேசினேன். இன்று காலை மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்” என்றார்.
நேற்று இரவு சிவன் கோயிலில் மயில்சாமியுடன் இருந்த டிரம்ஸ் மணி கூறுகையில், “எனது நண்பர் மயில்சாமி. சிவராத்திரியின் போது நாங்கள் சந்திப்போம். உலகில் எங்கு இருந்தாலும் சிவராத்திரிக்கு வந்துவிடு என அழைப்பார்.
வண்டலூர் பூங்கா அருகே ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அவருக்கு மிக பிடித்தமான கோயில் அது. அங்கே அழைத்து சென்று மைக் பிடித்து ஓம் காரம் சொன்னார். நான் டிரம்ஸ் வாசித்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தார்.
இந்த கோயிலுக்கு விவேக்கை அழைத்து வந்திருக்கிறேன். உங்களையும் அழைத்து வந்துவிட்டேன்.
அடுத்து ரஜினி சாரை அழைத்து வர வேண்டும். அவர் கையால் லிங்கத்துக்குப் பால் ஊற்ற வேண்டும்.
அதுதான் என் ஆசை என காரில் போகும் போது சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இப்படி நம்மை விட்டு பிரிவார் என எதிர்பார்க்கவில்லை. மிகப்பெரிய இழப்பு” என்றார்.
நடிகர் பார்த்திபன் அஞ்சலி செலுத்திய பிறகு கூறுகையில், “சொல்லமுடியாத துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மயில்சாமி மறைவு. நல்ல நடிகர்,இயக்குநர் என்பதை தாண்டி நல்ல மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் உதாரணம்.
அவருடைய இரண்டு மகன்களும் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்றார்.
நடிகர் மனோபாலா கூறுகையில், “மயில்சாமி மனிதர் அல்ல மாணிக்கம். இந்த பகுதியில் கொரோனா காலத்திலும், மழைக் காலத்திலும் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தவர் மயில்சாமி.
எம்.ஜி.ஆர் புகைப்படத்துக்குத் தினமும் மாலை போட வேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருந்தவர்.
அவருடைய இறப்பு மனதுக்கு அவ்வளவு பாரத்தைக் கொடுக்கிறது” என கண்ணீர் மல்க பேசினார்.
பிரியா