மக்களால் அதிகம் விரும்பப்படும் சம்பா ரவை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தியான வீடியோ பரவி வருவதாக, அதன் உரிமையாளர்கள் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. mayil mark samba rava fake news
கோயம்புத்தூரில் எம். வன்னியராஜன் அன்ட் சன்ஸ் என்ற பெயரில் வர்த்தகத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக சூலூரில் உள்ள பொன்முருகன் தால் மில்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மயில் மார்க் என்ற பிராண்டில் சிறந்த சம்பா ரவை பலரால் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மயில் மார்க் சம்பா ரவை நிறுவனம் தொடர்பாக போலியான தகவல்களை, ரவிகாந்த் என்பவர் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர்களான பொன்முருகன், பாலசுப்பிரமணியம் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, “முகம் தெரியாத ஒரு நபர் எங்கள் நிறுவனம் மீது சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகிறார்.
மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்பி வருகிறார். அதை மக்கள் நம்பி விடக்கூடாது என்பதற்காக உரிய ஆதாரங்களை மாநகர காவல் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை உணவில் பயன்படுத்தியிருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்கள் இல்லாமல் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். மக்கள் இதை நம்ப வேண்டாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் உணவு தரமானது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது” என அவர்கள் தெரிவித்தனர்.
