திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் இன்று ஜூலை 13-ந் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்க தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி வருகின்றனர். Goods Train Fire Accident
திருவள்ளூர் அருகே இன்று சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் வானுயர கரும்புகை எழுந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி தருகிறது. இதனால் இந்த விபத்து நடந்த இடத்தை சுற்றிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையான மூச்சு திணறல், கண் எரிச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இவ்விபத்தால் திருவள்ளூர் ரயில் பாதையில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சரக்கு ரயிலில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.
தீ விபத்து- என்ன காரணம்?
சென்னை துறைமுகத்தில் இருந்து எரிபொருளை ஏற்றிச் சென்ற போது சரக்கு ரயில் தடம் புரண்டதாக தெரிகிறது. இதனையடுத்தே சரக்கு ரயில் தீ பிடித்து எரிந்துள்ளது என்கின்றன முதல் கட்ட தகவல்கள். தற்போது 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த தீ விபத்தால் அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ரயில் சேவைகள் கடும் பாதிப்பு
இந்த தீ விபத்து காரணமாக இன்று காலை 5.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய மைசூரு வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரலிலேயே நிறுத்தப்பட்டது.
காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் இருந்து இன்று காலை 6:10-க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரவேண்டிய சென்னை சென்ட்ரல் மெயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டுள்ளது.
