முகத்தைச் சுத்தமாக வைத்திருந்தாலே முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது ஏற்படும் சுருக்கத்தைப் போக்க அழகுக்கலை நிபுணர்களும், மருத்துவர்களும் தரும் ஒரே அட்வைஸ்… மசாஜ்தான்!
”கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற நன்கு கனிந்த பழங்கள், தக்காளி, வெள்ளரி, கோஸ், கேரட் போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்றின் மசியல். நல்லெண்ணெய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய், இளநீர், 2 துளி தேன், தேங்காய்ப்பால் ஆகியவற்றைக் கொண்டு உங்கள் முகச்சுருக்கத்தைப் போக்கலாம்” என்று கூறும் அழகுக்கலை நிபுணர்கள், எப்படி மசாஜ் செய்வது என்பது பற்றியும் விளக்குகிறார்கள்…
“மசாஜ் செய்வதற்கு விரல் நுனியைத்தான் பயன்படுத்த வேண்டும். மசாஜ் செய்வதற்கு முன்பு முகத்தை மிதமான சுடு தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு, காய்ச்சாதப் பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாகத் துடைத்து விடுங்கள்.
சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதன் பிறகு முகத்துக்கு 15 நிமிடங்களும், கழுத்துப் பகுதிக்கு 5 நிமிடங்களும் மேற்கூறிய பொருட்களைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.
வாரத்துக்கு இரண்டு நாட்கள் காலை மற்றும் இரவில் மசாஜ் செய்து கொள்ளலாம். மசாஜ் செய்யும்போது, எப்போதுமே கீழிருந்து மேல்நோக்கித்தான் செய்ய வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கிச் செய்தால் சதைப் பகுதி தொங்கிவிடும்.
சிலருக்கு நெற்றியில் வரிகள் தோன்றுவது, சருமம் இறுகுவதால்தான். நெற்றிக்கு மேல் வகிட்டில் இருந்து இரண்டு பக்கமும் அரை வட்டமாகத் தைலம் தடவுவது போல் மசாஜ் செய்யுங்கள். இதனால், நெற்றியில் உள்ள ‘வரி’கள் காணாமல் போகும்.
இரு புருவங்களையும் தேங்காய் எண்ணெயால் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் நன்றாக நீவிவிட வேண்டும். இதனால் புருவம் ‘வில்’ போன்று நன்றாக வளரும். இரு புருவங்களுக்கு நடுவில் மூக்குப் பகுதியில் இருந்து கண்ணைச் சுற்றி மசாஜ் செய்வதை மைண்ட் மசாஜ் என்போம். மிகவும் கவனத்துடன் இந்த மசாஜை செய்தால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து முகம் பளிச்சென மாறும்.
சிலருக்கு முகத்தில் சதைப்பற்றே இல்லாமல் ஒட்டி இருக்கும். பழங்களால் மசாஜ் செய்வதன் மூலம் கன்னங்கள் பொலிவு பெறும்” என்கிறார்கள்.