இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘லட்கி’. நாயகியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படம் தமிழில் ‘பொண்ணு’ என்ற பெயரில் வெளியாகிறது.
மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனையான பூஜா பலேகர் இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூலை 15 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசும்போது,
“இந்தப் படம் எனக்கு மிகவும் சவாலான மனதுக்குப் பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லி என் இதயத்துக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. இறுதியாக இந்தப் படத்தை எடுக்க நினைத்தபோது புரூஸ்லியின் உருவம் என் மனதில் வந்து போனது. அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர். ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது.
அதே நேரம் அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என்று எனக்கு தோன்றியது. பலரை தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விப்பட்டு சந்தித்தேன். அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சைனாவின் ஒரு படத் தயாரிப்பு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சரியப்பட்டு படத்தைத் தயாரிக்க முன் வந்தார்கள். பிறகு இந்தப் படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன்.
இந்தப் படத்தை ஒரே நேரத்தில் அனைத்து மொழியிலும் வெளியிட வேண்டும் எனத் திட்டமிட்டோம். கோவிட் காரணங்களால் இந்தப் படம் தாமதமாகிவிட்டது.
ஒரு காலத்தில் என்னுடைய இளம் வயதில் புரூஸ்லியின் ‘என்டர் தி டிராகன்’ படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை. ஆனால், இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளதில் எனக்கு மகிழ்ச்சி. என்னுடைய நீண்ட நாள் கனவு இப்போது நனவாகியிருப்பதிலும் எனக்கு சந்தோஷம்தான்” என்றார்.
நடிகை பூஜா பலேகர் பேசுகையில், “நான் இந்தப் படத்துக்காக இங்கு வந்ததில் சந்தோஷமடைகிறேன். போன முறை நான் சென்னை வந்தபோது தற்காப்பு கலை வீரராக வந்தேன். இன்று நடிகையாக இங்கு வந்துள்ளேன்.ராம் கோபால் வர்மா சாரின் படத்தில் நான் நடித்தது எனக்கு கனவு போல் உள்ளது. நான் ராம் கோபால் வர்மா சாரின் ரசிகை. இன்று அவரது இயக்கத்தில் ஒரு தற்காப்பு கலை படத்தில் நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்தப் படம் சீனாவில் 40,000 திரைகளில் வெளியாக உள்ளது. எனக்கு நடிப்பில் முன் அனுபவம் எதுவும் இல்லை. இயக்குநர் ராம் கோபால் சர்மா சார்தான், எனக்கு எல்லா உணர்வுகளையும் வெளியே கொண்டு வர உதவினார். நான் புரூஸ்லியின் தீவிர ரசிகை. படத்திலும் அப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த அனுபவமாக இருக்கும்” என்றார்.
அம்பலவாணன்