தேர்தல் பத்திரம் திட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதிக்கவில்லை என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தநிலையில், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவரும் ஏற்கத்தக்க வகையில், ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு தேர்தல் பத்திர திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் எள்ளளவும் மதிக்காத மத்திய நிதியமைச்சரின் ஆணவம். தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவாராம்.
கருப்பு பணத்தை ஒழித்து விட்டீர்கள், ஊழலையும் ஒழித்து விட்டீர்கள். அரசு அமைப்புகளை வைத்து கட்ட பஞ்சாயத்து நடத்தி கோடி கோடியாய் கொள்ளையடிக்க தேர்தல் பத்திர சட்டத்தை கொண்டு வந்து கல்லா கட்டியதை தவிர வேறு என்ன செய்தீர்கள்?
எவ்வளவு துணிச்சல் இருந்தால் மக்கள் நலன் சார்ந்த ஒரு தேர்தல் அறிக்கை கூட தர முடியாத பாஜக, ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவோம் என சொல்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்!
ஹெல்த் டிப்ஸ்: சொட்டு சொட்டாக சிறுநீர் பிரச்சினைக்கு எளிய தீர்வு!