அனைத்து பகுதிகளிலும் ஐடி பூங்காக்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ்

Published On:

| By Balaji

அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டம் வகுக்கப்படும் எனவும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஐடி பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (ஜூலை 21) தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைச்சர் நேற்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கோவை வந்துள்ளேன். கோவையில், 114 கோடியில் இரண்டாவது எல்காட் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டேன்.

தென்மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கி, அதிக அளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் 4.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பை படித்து முடித்து வெளியே வருகின்றனர். தற்போது, தகவல் தொழில்நுட்பத்துறையில் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கும் நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்துறையை மேம்படுத்தி, தமிழகத்திலேயே அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் செல்லாமல் இளைஞர்கள் அந்தந்த பகுதிகளிலேயே வேலை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழகம் ஐந்தாவது இடத்திலிருந்து, முதலிடத்துக்குக் கொண்டு வரப்படும். தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. எனவே, இனிவரும் காலங்களில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டங்களை வகுக்கவுள்ளோம்” என்று கூறினார்.

ADVERTISEMENT

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share