Mano Thangaraj question to enforcement department
எதிர்க்கட்சிகளை தேடித்தேடி கைது செய்யும் அமலாக்கத்துறை பாஜகவை சார்ந்த ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன்? என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பிஆர்எஸ் எம்.எல்.சி கவிதா உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜகவை சேர்ந்த 18 பேரை குறிப்பிட்டு அவர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று (மார்ச் 23) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“1. 2019-ல் எடியூரப்பாவிடம் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் அருண் ஜெட்லீ, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக மத்திய அலுவலக கணக்கு என பலருடன் 1800 கோடி ரூபாய் மதிப்பிலான பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்ததே, எடியூரப்பாவை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
2. குஜராத்தில் மோடி ஆட்சியில் 750 கோடி ஊழலில் ஈடுபட்ட அமைச்சர் விபுல் சௌத்ரி-யை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
3. பல கோடி டெண்டர் ஊழல் வழக்கில் ஈடுபட்ட கர்நாடக பாஜக அமைச்சர் நேரு ஓலேகரை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
4. 40 பேர் பலி மற்றும் பல கோடி ஊழல் நடைபெற்ற மத்திய பிரதேச வியாபம் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக அமைச்சர் லக்ஷ்மிகாந்த் ஷர்மா-வை 2019-ல் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. பின்பு கொரோனாவால் மரணமடைந்தார். முறைகேடு நடந்ததை நாடே அறியும். இந்த பணபரிமாற்றத்தை ED விசாரிக்காதது ஏன்?
5. எடியூரப்பா கொரோனா நேரத்தில் 40 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ. பாசனகவுடா பட்டில் எத்னல் குற்றஞ்சாட்டினாரே, அதை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
6. 2001-ல் பாதுகாப்பு துறை தளவாடங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடைய பாஜக தலைவர் பங்காரு லட்சுமணனை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
7. பெங்களூர் மெகாசிட்டி ஊழலில் ஈடுபட்ட கர்நாடக பாஜக அமைச்சர் யோகேஷ்வர்-ஐ ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
8. மோடி அமைச்சரவையில், குஜராத்தில் 400 கோடி மீன்வள ஒப்பந்த ஊழல் வழக்கில் ஈடுபட்ட அமைச்சர்கள் பர்ஷோத்தம் சோலங்கி & திலீப் சங்கனி-வை ED ரெய்டு செய்து அவர்களை கைது செய்யாதது ஏன்?
9. 103 கோடி வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மகாராஷ்டிரா பாஜக தலைவர் மோகித் கம்போஜ்-ஐ ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
10. 18 கோடி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட கர்நாடக பாஜக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி-ஐ ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
11. 2438 கோடி ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் ஹரீஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ்-ஐ ED ரெய்டு செய்து கைது செய்யாதது ஏன்?
12. 5000 கோடி நியோமேக்ஸ் நிதி மோசடியில் ஈடுபட்ட மதுரை பாஜக பிரமுகர் வீரசக்தி-ஐ ED ரெய்டு செய்து கைது செய்யாதது ஏன்?
13. விக்ராந்த் போர்கப்பல் பெயரில் 57 கோடி பண மோசடியில் ஈடுபட்ட மகாராஷ்டிரா பாஜக தலைவர் கிரித் சோமயா-வை ED ரெய்டு செய்து கைது செய்யாதது ஏன்?
14. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த திலீப் ரேய் ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கில் பல கோடி மோசடியில் ஈடுபட்டாரே – EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
15. 1 கி.மீ. சாலை அமைக்க 250 கோடி; சுங்கச்சாவடி ஊழல் – 137 கோடி; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 22.44 கோடி ஊழல் – இதில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை EDRaid செய்து கைது செய்யாதது ஏன்?
16. மத்திய உள்துறை அமைச்சகம் ஊழலில் முதலிடம் பிடித்துள்ளதே. இதில் மத்திய அமைச்சருக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை EDRaid செய்து விசாரிக்காதது ஏன்?
17. ரூ. 526 கோடிக்கு வாங்க இருந்த ரபேல் விமானத்தை மோடி அரசு ரூ. 1,670 கோடிக்கு வாங்கியதே – இதில் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக அமைச்சர்களை EDRaid செய்து விசாரிக்காதது ஏன்?
18. 1.37 கோடி ஊழல் வழக்கில் ஈடுபட்ட மிசோரம் பாஜக எம்.எல்.ஏ. புத்ததான் சக்மா-வை #EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?” என கேள்விகளை அடுக்கியுள்ளார் மனோ தங்கராஜ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பிஎம்எல்ஏ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால்….: உச்ச நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை!