எந்த மொழித் திரையுலகைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ‘இந்த படம் வித்தியாசமா இருக்கும்’ என்ற வார்த்தைகளை உதிர்க்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உண்மையைச் சொன்னால், வித்தியாசமான படங்களைத் தரும் எவரும் ‘இது வித்தியாசமானது’ என்று சொல்லவே மாட்டார்கள். அதற்கு உதாரணம் சொல்வது போன்று அமைந்திருக்கிறது ‘மனிதர்கள்’ பட ட்ரெய்லர். manithargal movie shows a dark lights in trailer
புதுமுக இயக்குனர் ராம் இந்திரா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிலேஷ் மேத்யூ இசையமைத்திருக்கிறார். கூடுதல் பின்னணி இசையை ஜான் ராபின்ஸ் அமைத்திருக்கிறார்.
அஜய் ஆபிரகாம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, தின்சா படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார்.
இதில் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
‘கிரவுட் பண்டிங்’ முறையில் பலரிடம் பணம் பெறப்பட்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு இரவு. தனியாக ஒரு இடத்தில் மது அருந்தச் செல்கின்றனர் சில இளைஞர்கள். அவர்களில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார் அல்லது அகாலமாக உயிரிழக்கிறார். அதன்பிறகு மீதமுள்ள அத்தனை பேரும் ஒரு காரில் ஏறிப் பயணிக்கின்றனர். அந்த இரவு விடிவதற்குள் அவர்கள் ஒவ்வொருவரது எண்ண ஓட்டமும் எவ்வாறானதாக இருந்தது? அது அடுத்தவரை எப்படிப் பாதித்தது என்று சொல்கிறதாம் இப்படம்.
’மது அருந்திய நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் கொலை’ என்பது போன்ற செய்திகளைத் தினசரிகளில் பார்த்து வருகிற சூழலில், அப்படியொரு விஷயத்தைத் திரையில் காட்டவிருக்கிறது ‘மனிதர்கள்’.
இப்படம் ஒரே இரவில் நடப்பதாகக் கதை அமைக்கப்பட்டிருப்பது பெரிய விஷயமல்ல. இதில் நடித்திருப்பவர்களும் கூடப் பெரும்பாலும் ஆண்கள் தான் என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில், சேவல் பண்ணைக்குள் புகுந்த உணர்வை இப்படம் ஏற்படுத்தப்போகிறது.
சகதியில் உருள்கிற சில மனிதர்களைக் காட்டியது இப்படத்தின் பர்ஸ்ட் லுக். இந்த நிலையில் ட்ரெய்லரும் கவனம் ஈர்த்திருக்கிறது. இவ்விரண்டையும் மிஞ்சுகிற வகையில் படம் அமைந்துவிட்டாலே, இதுவொரு வித்தியாசமான படைப்பாகவும் மாறிவிடும். அதற்கான உத்தரவாதத்தை ‘மனிதர்கள்’ குழு தந்திருக்கிறது. தியேட்டரில் அது மெய்யானால் சரிதான்..!
