மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்ட காவல்நிலையத்துக்கு 2020ல் மத்திய அரசு மகுடம் சூட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் வன்முறை பூமியாக மாறியிருக்கிறது. உச்ச கட்டமாக இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஆண்களுக்கு மத்தியில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மணிப்பூர் வன்முறைக்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், அம்மாநில முதல்வர் பைரன் சிங், இதுபோன்று நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்திருக்கிறது. எதற்குத்தான் நடவடிக்கை எடுப்பது என்ற வகையில் ஒரு அலட்சியமான பதிலை சொல்லியிருக்கிறார்.
குறிப்பாக குகி சமூக பெண்கள் மே 4ஆம் தேதி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட போது, போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்ததாகவும், இதில் போலீசார்தான் அந்த கும்பலிடம் தங்களைக் கொண்டு சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நாட்டிலேயே சிறந்த காவல்நிலையம், நம்பர் 1 காவல் நிலையம் என்று உள்துறை அமைச்சகத்தால் 2020ஆம் ஆண்டு மகுடம் சூட்டப்பட்ட காவல் நிலையத்துக்கு ஒரு கிமீ தூரத்துக்கு அருகே இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
பொதுவாக, குற்றங்களைக் கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம், ஒழுங்கை பாதுகாத்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களுக்குத்தான் இப்படி ஒரு உயரிய விருது வழங்கப்படும்.
அந்த வகையில் 2020ல் நாட்டின் சிறந்த காவல்நிலையங்களில் முதலிடம் பிடித்த மணிப்பூர் மாநிலம் தௌபல் மாவட்டத்துக்கு உட்பட்ட நொங்போக் செக்மாய் காவல் நிலையத்துக்கு ஒரு கிமீ தூரத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
சம்பவம் தொடர்பான வீடியோவில் இடம்பெற்றிருந்த பகுதியை சாட்டிலைட் இமேஜ் மூலம் ஆய்வு செய்ததில், அந்த இடம் நொங்போக் செக்மாய் காவல் நிலையத்துக்கு அருகில் இருப்பது தெரிய வருகிறது என இந்தியா டுடே ஊடகம் கூறியுள்ளது.
அப்படிப்பட்ட காவல் நிலையம் இன்று செயலற்றதாகி இருப்பது, மணிப்பூர் பெண்கள் விவகாரத்தில் எவ்வளவு வேகமாக குற்றவாளிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியதன் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
இந்த சம்பவம் நடந்து 14 நாட்களுக்கு பிறகுதான் எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 77 நாட்களுக்கு பிறகுதான் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
அதே தருமபுரி மண்ணில்… உரிமைத் தொகை திட்ட முகாம்: முதல்வர் ஸ்டாலின்
’நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது’ – செல்லூர் ராஜூ