“வளமிக்க” துறைகளை காங்கிரஸ் தேடிச் செல்வதில்லை.. அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றபோது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது. மக்கள் சேவையே காங்கிரஸ் மாடல் என மாணிக்கம் தாகூர் எம்பி குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்வைத்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது திமுக கூட்டணியில் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் பதிவில், “பொதுப்பணித் துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற “வளமிக்க” துறைகளை காங்கிரஸ் தேடிச் செல்வதில்லை.
மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களை மையமாகக் கொண்ட துறைகள் — சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் & குழந்தைகள் நலன், காதி & கைத்தறி — ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது.
எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல; மக்கள் சேவை. அதுவே காங்கிரஸ் மாடல்.” என குறிப்பிட்டுள்ளார்.
