ஷாரிக் வாட்ஸ் அப்பில் ஈஷா சிவன்: அதிர்ச்சித் தகவல்!

Published On:

| By Kavi

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக் தனது வாட்ஸ் அப்பில் உள்ள குழுவின் முகப்பில் ஈஷாவில் உள்ள சிவன் சிலையை வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 19 ஆம் தேதி மாலை கர்நாடக மாவட்டம் மங்களூரு அருகே நாகூர் பகுதியில் ஆட்டோ வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

இது குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு என்றும், பயங்கரவாத தாக்குதல் என்றும் கர்நாடக டிஜிபி பிரவின் சூத் தெரிவித்துள்ளார்.

மங்களூரு குண்டுவெடிப்புக்கும், கோவை கார் வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என கோவை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளையில், ஆட்டோ வெடிப்பு சம்பவத்தின் போது அதில் பயணித்த ஷாரிக் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஷாரிக் தனது வாட்ஸ் அப் குழுவின் டிபியில் ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் சிலையை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அவர் ஈஷா மையம் சென்றாரா? அல்லது அவருடைய நோக்கம் என்ன? எதற்காகச் சிவன் சிலையை டிபியாக வைத்தார் என பல கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மங்களூர் போலீஸ் கமிஷனர் சஷி குமாரிடம் ஈஷா யோகா மையம் குறிவைக்கப்பட்டதா, கோவை கார் வெடிப்புக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், “மத்திய புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. ஷாரிக் சென்று வந்த பகுதியிலும் அவர் வசித்த பகுதியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியில் ஒயின் ஷாப்புக்கு அருகில் இரு இளைஞர்கள் செல்வதுபோன்ற வீடியோ வெளியாகியுள்ளது. உண்மையில் அந்த வீடியோ இந்த வழக்கிற்குத் தொடர்புடையது அல்ல.

வீடியோவில் இடம்பெற்றுள்ள இளைஞர்கள் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் அல்ல” என்று கூறினார். இதுபோன்று பொய்யான வீடியோக்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக் குறித்து கூறுகையில், “மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் ஷாரிக் உள்ளார். 45 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரிக்கின் உடல்நிலை தேறி வந்ததும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

கோவையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மங்களூரு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

கேரள ஜோடியின் விநோத செயல்: பாராட்டிய இந்திய ராணுவம்!

சூர்யாவுக்கு கட்டுப்பாடு – காயத்ரிக்கு நீக்கம்: அண்ணாமலையின் இரட்டை அளவுகோல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share