’விடுதலை’ வழியே நெடுநாள் காத்திருப்புக்குப் பிறகு, கதை நாயகன் ஆன சூரி, ‘மாமன்’ படத்தை அடுத்து ’மண்டாடி’யில் நடிக்கிறார்.
வெற்றிமாறனின் இயக்குனர் குழுவில் பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இதனை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிற, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிற இப்படத்தை ஆர்.எஸ் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இதில் மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சஜனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த பட்டியலைப் பார்த்தாலே, மொழிவாரியாகச் சில கலைஞர்களை இழுத்துப் போட்டிருப்பதைக் காண முடியும். ‘பான் இந்தியா வெளியீடு’ எனும் இலக்கைக் குறி வைத்திருப்பதையே இது காட்டுகிறது. Mandaadi Movie 2025

இன்னொரு முக்கியமான விஷயம். இப்படத்தின் வழியே தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகர் ஒருவர் தமிழுக்கு வருகிறார். அவரது பெயர் சுஹாஸ்.
கொரோனா ஊரடங்குக்கு முன்னதாக, ‘யூடியூப் சென்சேஷன்’ ஆக ஆந்திரா, தெலங்கானாவில் அறியப்பட்டவர். விஜயவாடாவில் பிறந்து வளர்ந்த இவர், கல்லூரிப் படிப்புக்குப் பின்னர் ஹைதராபாதுக்கு இடம்பெயர்ந்தார். சில குறும்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். Mandaadi Movie 2025
அதன் மூலமாக ‘படி படி லெசே மனசு’, ‘மஜிலி’, ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’, ‘டியர் காம்ரேடு’ போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். நாயகனின் நண்பனாக வந்து போன இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதன் தொடர்ச்சியாக, ‘கலர் போட்டோ’ என்ற படத்தில் நாயகனாகத் தோன்றினார். Mandaadi Movie 2025
ஆஹா தளத்தில் வெளியான ‘கலர் போட்டோ’ ரசிகர்களைக் கவர்ந்ததோடு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதையும் வென்றது.
அதன்பிறகும் சில படங்களில் துணை பாத்திரங்களை ஏற்ற சுஹாஸ், பின்னர் பேமிலி ட்ராமா, ரைட்டர் பத்மபூஷன், அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட், ஸ்ரீரங்க நீதிலு, பிரசன்ன வதனம், கோரே புராணம், ஜனகா ஐதே கனகா படங்களில் நாயகனாக முன்னின்று தனக்கான இடத்தை உருவாக்கியிருக்கிறார்.
‘ஹிட்: தி செகண்ட் கேஸ்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பெரிதாக பில்டப் தரப்பட்ட ‘ஜாட்’ இந்திப் படத்திலும் சுஹாஸ் தலைகாட்டியிருக்கிறார்.
தொடர்ந்து இவர் நடிப்பில் கேபிள் ரெட்டி, அனந்தராவ் அட்வெஞ்சர்ஸ், உப்பு காப்புரம்பு படங்கள் வெளியாகவிருக்கின்றன. அமேசான் பிரைம் தளத்திற்காகத் தயாராகிற ‘உப்பு கப்புரம்பு’வில் சுஹாஸ் உடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக, நாயகனுக்குரிய ‘ஹீரோயிசம்’ இன்றி சராசரி மனிதராகத் தெரிபவராக, ஒருகாலத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன் போன்றோர் தமிழில் ஏற்ற பாத்திரங்களையொத்த வார்ப்புகளில் தன்னைப் பொருத்திக் கொள்பவராகத் தோற்றம் தருபவர் சுஹாஸ்.

சுமார் பத்தாண்டுகளில் தனக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொண்டு மேலேறி வந்த தெலுங்கு நட்சத்திரங்களில் நானிக்கு அடுத்தபடியாகச் சுட்டிக்காட்டப்படுபவர் இவரே. அது மட்டுமல்லாமல், தெலுங்கில் நாயகனாக மட்டுமே நடிக்கத் தொடங்கியிருக்கிற சுஹாஸ் தமிழில் ‘மண்டாடி’யில் துணை கதாபாத்திரமாகத்தான் வரப் போகிறார்.
ஆனாலும், ‘வெற்றிமாறனுக்கும் இப்படத்திற்கும் சம்பந்தம் இருக்கிறபோது, இதைவிடப் பெரிதாகத் தமிழில் எனக்கு அறிமுகம் கிடைத்துவிடாது’ என்றிருக்கிறார் சுஹாஸ்.
கதைக்கு முக்கியத்துவம் இருக்கிற ஒரு திரைப்படத்தில் வேறு மொழிக் கலைஞர்கள் இடம்பெறுகிறபோது, அதற்கான பார்வையாளர்களின் எல்லையும் விரிவாகிறது. அந்த வகையில் நம்மூர் நட்சத்திரங்கள் பிற மொழிகளில் வாய்ப்புகளைப் பெறுவதற்கும், சிறந்த முறையில் உருவாகிற படங்கள் பெருங்கவனத்தை ஈர்ப்பதற்கும் இது போன்ற முயற்சிகளே துணை நிற்கின்றன. அந்த வகையில் ‘சுஹாஸ்’ வரவு இனிதான பலப்பல பலன்களைத் தமிழ் திரையுலகிற்குத் தரட்டும்!
