கோபிசெட்டிபாளையம் அதிமுக பொது கூட்டத்திற்கு வந்த அர்ஜுனன் என்ற அதிமுக தொண்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த அதிமுக நிர்வாகிகள் அர்ஜுனன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று மாலை (நவம்பர் 30) எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கட்டிட தொழிலாளியாக பணியாற்றும் 43 வயதான அர்ஜுனன் என்பவரும் வந்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வருவதற்கு முன்னரே அர்ஜுனன் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த அர்ஜுனன் குடும்பத்தினர் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட கூட்டம் முடிந்த பின்னர் ஈரோடு மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் , மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
உயிரிழந்த அர்ஜுனன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அர்ஜூனன் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதாக தெரிவித்தனர்.
