பெண்ணின் புகைப்படத்தை ஜெமினி ஏஐ தொழில்நுட்பம் மூலமாக ஆபாசமாக சித்தரித்த இளைஞர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டிஜிட்டல் உலகில் தற்போது நாம் எடுக்கும் புகைப்படங்களில் வெளிச்சம், நிறங்கள் மற்றும் விருப்பமான பின்னணியை உருவாக்க ஜெமினி ஏ.ஐ தொழில் நுட்பம் உதவியாக உள்ளது. மேலும் உங்களின் கற்பனைக்கு ஏற்பப் படங்களை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது. இதை பலரும் ஆர்வமுடன் பயன்படுத்துகின்றனர். ஆனால் சில நேரங்களில் இது தவறான விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஜெமினி ஏ.ஐ தொழில் நுட்பம் மூலமாக புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி ரசிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது.
மணிகண்டன் இதற்கு முன்பு பணிபுரிந்த நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த பெண்ணின் புகைப்படத்தை ஏ. ஐ மூலமாக ஆபாசமாக சித்தரித்துள்ளார்.
பின்னர் அந்தப் புகைப்படத்தை அந்த பெண்ணிற்கும் அனுப்பியுள்ளார். ஆபாச புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
