மேற்கு ஆப்ரிக்காவின் மாலி நாட்டில் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்ட 5 தமிழரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்.பி, ” மேற்கு ஆப்ரிக்கா – மாலி நாட்டில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மற்றும் தென்காசியைச் சேர்ந்த பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து, இசக்கிராஜா மற்றும் தளபதி சுரேஷ் ஆகிய ஐந்து தொழிலாளர்கள், அந்த நாட்டிலுள்ள ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடத்தப்பட்டிருக்கும் அத்தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் 5 தமிழரை மீட்க வலியுறுத்தி உள்ளனர்.
மாலியில் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்ட 5 தமிழர்கள் யார் யார்?
மாலியின் கோப்ரி (Kobri) என்ற பகுதியில் தனியார் மின்சார நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த
- துாத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் கொடியங்குளத்தைச் சேர்ந்த புதியவன்
- நாரைகிணறு பொன்னுதுரை
- வேப்பங்குளம் பேச்சிமுத்து
- தென்காசி மாவட்டம் கடையநல்லுார் முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா
- புதுக்குடி தளபதி சுரேஷ் ஆகியோர் கடத்தப்பட்ட தமிழர்கள்.
இவர்கள் மும்பையைச் சேர்ந்த ‘ட்ராயிங் ரெயில் லைட்டிங்’ என்ற நிறுவனத்தின் சார்பில் மாலி நாட்டின் கோப்ரி நகரத்திற்கு அருகில் உள்ள தனியார் மின்சார நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
5 தமிழரை அல்-கொய்தா,ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவினர், துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
மாலி நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சி கவிழ்ப்புகளால் நிலையற்ற அரசியல் நீடித்து வருகிறது. மேலும் ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்களின் கைகளும் ஓங்கி இருக்கின்றன. மாலியின் ராணுவத்துக்கும் ஆயுத குழுக்களுக்கும் இடையேயான உள்நாட்டுப் போரில் பெரும் பகுதிகளை அரசு இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
