நடிகர்களைத் தொடர்ந்து ஹைபிரிட் கஞ்சாவை பயன்படுத்தியதாக பிரபல மலையாள இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. malayalam cine industry under hybrid ganja arrest
மலையாள திரையுலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகைகளுக்கு பாலியல் சீண்டல் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மலையாள திரையுலக சங்கப் பதவியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது கஞ்சா புழக்கம் மலையாள திரையுலகை ஆட்டுவித்து வருகிறது.
சமீபத்தில் கஞ்சாவை பயன்படுத்தியதாக பிரபல நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி ஆகியோர் கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி ஆழப்புழாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் 3 கிலோ ஹைபிரிட் கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நடிகை தஸ்லீமா சுல்தானா, அவரது கணவர் சுல்தான் அக்பர் அலி மற்றும் கே. ஃபெரோஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடன் நடத்திய போலீசார் விசாரணையில், தாய்லாந்தின் பாங்காக்கில் பயிரிடப்பட்ட இந்த ஹைபிரிட் கஞ்சாவை சுல்தானாவின் கணவர் அக்பர் அலி திருச்சிராப்பள்ளிக்கு கடத்தி வந்து, அங்கிருந்து ஃபெரோஸின் உதவியுடன் ஓமனபுழாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, தஸ்லீமாவின் உதவியுடன் திரைப்பட துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு விநியோகித்து வந்தது தெரியவந்தது.

கைதான தஸ்லீமாவின் செல்போனில் இருந்த அழைப்புகளின் அடிப்படையில், நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி மற்றும் மாடல் செளமியா ஆகியோருக்கு விசாரணைக் குழு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனையடுத்து மூவரும் இன்று கலால் உதவி ஆணையர் எஸ். அசோக் குமார் முன்பு ஆஜாராகினர்.
இயக்குநர்கள் கைது!
இதற்கிடையே நேற்று கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல இயக்குநர்கள் காலித் ரஹ்மான், அஷ்ரப் ஹம்சா மற்றும் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹீர் ஆகியோர் கஞ்சா பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலப்புழா ஜிம்கானா, தல்லுமாலா மற்றும் உண்டா ஆகிய படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். அதே போன்று தமாஷா மற்றும் பீமண்டே வாழி ஆகிய படங்களை இயக்கியவர் ஹம்சா.
இருவரும் அடுத்த படத்திற்கான கதை விவாதத்திற்காக கொச்சியில் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தங்கியிருந்தனர்.
அப்போது போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சோதனையிட்டபோது, அங்கிருந்த 1.50 கிராம் ஹைபிரிட் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இயக்குநர்கள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக கொச்சியில் போதைப் பொருள் தடுப்பு துணை ஆணையர் டி.எம். மஜு அளித்த பேட்டியில், “போதைப்பொருட்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையான ’ஆபரேஷன் கிளீன்’ இரண்டாம் கட்டத்தின் ஒரு ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்தது.
போதைப்பொருள் பயன்படுத்துபவர்களிடையே ஹைபிரிட் கஞ்சா ஒரு புதிய போக்காக இருப்பதை நாங்கள் கவனித்தோம். எங்களுக்கு கிடைத்த ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் நாங்கள் அந்த பிளாட்டை சோதனை செய்தோம். விசாரணையில் அவர்கள் இருவரும் பிரபல இயக்குநர்கள் என்பது தெரியவந்தது.
போதைப்பொருள் பயன்படுத்த இடம் கொடுப்பதும் NDPS சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்பதால், எனவே ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்படும். கைதான இருவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கைதானவர்களுக்கு ஆலப்புழா ஹைபிரிட் கஞ்சா வழக்கில் எந்த தொடர்பும்.இல்லை என்பது தெரியவந்துள்ளது” என்று டி.எம். மஜு தெரிவித்தார்.
ஏற்கெனவே மலையாள நடிகர்கள் சிக்கிய நிலையில், தற்போது பிரபல இயக்குநர்களும் கஞ்சா வழக்கில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“