பாரம்பரியமாக சமைக்கப்பட்டு வந்த கோலா உருண்டைகள், தற்போது தளர்வான கிரேவியில் கலக்கப்பட்டு கோஃப்தாவாக பலராலும் விரும்பப்படுகிறது. பலருக்குத் தவிர்க்க முடியாத சைடிஷாக மாறிவிட்டது. கோடையில் வீட்டிலுள்ளவர்களை மகிழ்விக்க சத்தான இந்த கீரை மலாய் கோஃப்தா பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.
என்ன தேவை?
- கோஃப்தா செய்ய:
- முருங்கைக்கீரை – 2 கப் (அழுத்தி அளந்தது)
- பனீர் – 100 கிராம்
- உருளைக்கிழங்கு – 2 அல்லது 3
- மைதா – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
கிரேவி செய்ய:
- வெங்காயம் – 3 (நறுக்கிக்கொள்ளவும்)
- தக்காளி – 4 (நறுக்கிக்கொள்ளவும்)
- இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- முழு முந்திரி – 6 – 8
- மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா 2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
- சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
- ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்
- எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
கீரையைச் சுத்தம் செய்யவும். உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசிக்கவும். பனீரைத் துருவவும். மூன்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு, மைதா சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த கலவையை எடுத்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். கோஃப்தாக்கள் தயார்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி, முந்திரியைப் போட்டு ஒரு புரட்டுப் புரட்டி இறக்கி ஆறவிடவும். இதைச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ளவும். மீண்டும் இதைக் கடாயில் ஊற்றி, கொதிவந்தவுடன் கோஃப்தாக்களை போட்டு, மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும். நாண்/சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.