makkal needhi maiam form committee
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அதிமுகவில் தொகுதி பங்கீடு, தேர்தல் ஒருங்கிணைப்பு, விளம்பர பிரிவு கூட்டங்கள் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்றது.
அந்தவகையில், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஜனவரி 23-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் மவுரியா,
“நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன.
முதலாவது, தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் நலன்களில் எந்த சமரமும் அனுமதிக்கப்படாது. இரண்டாவது, தலைவர் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளுடன் ஒத்துபோகிறவர்களுடன் மட்டும் தான் கூட்டணி அமையும்.
இந்த இரண்டு நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளிநாடு செல்லவிருப்பதால், கட்சியின் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோருடன் ‘2024 பாராளுமன்றத் தேர்தல்’ குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பின், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்பதற்கும் தலைவர் கமல்ஹாசன் ‘தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவினை’ உருவாக்கியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்களான A.G. மௌரியா, தங்கவேலு, பொதுச் செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
விண்ணப்பம் செய்வதற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ஆம் தேதி அன்றே டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ரஜினி சார் தைரியம் யாருக்கும் வராது”: விஷ்ணு விஷால்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
makkal needhi maiam form committee