மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (ஜூலை 1) அதிகாலை ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் 26 பயணிகள் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனேவுக்கு சென்றுகொண்டிருந்த பேருந்தில் 33 பேர் பயணித்தனர். இந்த பேருந்தானது அதிகாலை 2 மணியளவில் புல்தானா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 7 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புல்தானா காவல் கண்காணிப்பாளர் சுனில் கடாசன் தலைமையிலான போலீசார் விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
விபத்து குறித்து சுனில் கடான் கூறும்போது, “நாக்பூரிலிருந்து புனேவுக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் புல்தானா பகுதியில் விபத்துக்குள்ளானது. டயர் வெடித்ததால் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 7 பேர் புல்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
செல்வம்