குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. maharaja nithilan holding oscar award at usa
தனது மகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒரு சாதாரண தந்தை எப்படி அடையாளம் கண்டு பழிவாங்குகிறார் என்பது தான் அப்படத்தின் கதை.
அதில் நித்திலனின் அபாரமான திரைக்கதையும், விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யப், சிங்கம்புலி, சாச்சனா ஆகியோரின் அசத்தலான நடிப்பும் படத்திற்கு இமாலய வெற்றியைத் தேடித் தந்தன. இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் உச்சத்தை தொட்டது.

மேலும் விஜய் சேதுபதியின் கேரியரில் முதல் நூறு கோடி வசூலை எட்டியப் படம் என்ற சாதனையையும் மகாராஜா படைத்தது.
இந்த நிலையில் மகாராஜாவைப் பார்த்த ஆஸ்கர் விருது வென்ற பேர்ட்மேன் படத்தின் இயக்குனர் அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டியதாகவும், அவரது அடுத்த படத்தில் நடிக்க அனுராக் காஷ்யப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நித்திலன் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் நித்திலன், நியூயார்க்கில் பேர்ட்மேன் பட திரைக்கதை எழுத்தாளர் அலெக்சாண்டர் டினோலாரிஸை சந்தித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (மே 31) பதிவிட்டுள்ள பதிவில், “நியூயார்க்கில் ரசிக்க வேண்டிய ஒரு தருணம் இது. பேர்ட்மேன் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஆஸ்கார் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளருடன் தினமும் உணவருந்தி நேரத்தை செலவிட முடியாது.
என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்து இவ்வளவு கருணை காட்டியதற்கு நன்றி அலெக்சாண்டர் டினோலாரிஸ்❤️❤️” என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் டினோலாரிஸின் ஆஸ்கர் விருதை கையில் ஏந்தியபடி நித்திலன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
