டாஸ்மாக்கில் அறிவுரை வழங்கிய காவலர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. madurai police murdered at tasmac
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்து அருகே கள்ளபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வந்தார்.
முத்துக்குமார் இன்று (மார்ச் 27) பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது, அங்கிருந்த கஞ்சா வழக்கில் கைதான பொன்வண்டு மற்றும் அவரது நண்பர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள், முத்துக்குமார் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு தாக்கினர். மேலும் அதனை தடுக்க வந்த ராஜாராமையும் தாக்கிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காவலர் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது உறவினர் ராஜாராம் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படும் பொன்வண்டு மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் காவலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை! madurai police murdered at tasmac
அதில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லாத மாடல் தான் ஸ்டாலின் மாடல். மக்களுக்கும், மக்களைக் காக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சி என்பது செயலற்ற வெறும் பொம்மை ஆட்சியே!
தங்கள் பணிகளை செய்யும் காவல்துறையினரின் பாதுகாப்பு பறிபோவதற்கு காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சினிமா வசனம் மற்றும் வெட்டி பேச்சு பேசும் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரும் முழு பொறுப்பேற்க வேண்டும்!
முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் Political Stunt-களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் Jurisdiction-ல் இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள்.
காவலர் முத்துக்குமார் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் , உரிய நிதி உதவியும் வழங்கிட ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி தெரிவித்துள்ளார்.