திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞர் பெயரில் மதுரையில் மிகப் பெரிய நூலகம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி 11.1.2022 அன்று முதல்வர் ஸ்டாலினால் நூலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது தமிழ், ஆங்கில புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான புத்தகங்கள், கலைஞர் எழுதிய புத்தகங்கள் என புத்தகங்கள் அடுக்கும் பணிகள் நடைபெற்று, திறப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

சுமார் 60 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சென்று படிக்கும் வகையில் பல்வேறு புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.

ரூ.18 கோடி ரூபாய் செலவில் ஃபர்னிச்சர் செய்யப்பட்டுள்ளது. ரூ.5 கோடிக்கு கணினி வாங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 215 கோடி ரூபாயில் பிராமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூலகம் அமையும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கவனித்து, கண்காணித்து வருகிறார்.

முன்னாள் முதல்வர் கலைஞர், அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணாவுக்காக சென்னையில் நூலகம் அமைத்தார். இன்று கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது.

மதுரை – புதுநத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கலைஞர் நூலகம் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

நுழைவாயில் முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை ஒன்று புத்தகம் படிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையும் அன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது. 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் மொத்தம் 7 தளங்களுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது கலைஞர் நூலகம். 4 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

தெற்காசியாவில் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று என பெயர் பெற்றுள்ள இந்த நூலகத்தின் 7 தளங்களில் ஏசி, அனைத்து தளங்களுக்கும் செல்ல வசதியாக லிப்ட், எஸ்கலேட்டர் என வாசகர்களுக்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரை தளம் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கலைக்கூடம், கான்பிரன்ஸ் ஹால், விஐபி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் கலைஞர் எழுதிய நூல்கள், குழந்தைகளுக்கான அரங்கம், குழந்தைகளுக்கான நூல்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள்,

இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள், மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள், நான்காவது தளத்தில் ஆங்கில நூல்களோடு போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான மின் புத்தகங்கள், ஆடியோ அறை மற்றும் பிரெய்லி புத்தகங்கள்

ஐந்தாம் தளத்தில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆறாம் தளத்தில் கூட்ட அரங்கு, நூலக ஸ்டூடியோ, நுண்பட நூலக நிர்வாக பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு, நிர்வாக அலுவலகம் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது கலைஞர் நூலகம்.
ஒரே நேரத்தில் 8 ஆயிரம் பேர் முதல் 10 ஆயிரம் பேர் வரை இந்நூலகத்தை பயன்படுத்த முடியும் என நூலகத்தின் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இவ்வளவு வசதிகள் கொண்ட கலைஞர் நூலகம் திறக்கப்படுவதையொட்டி வாசகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த நூலகம் மதுரை, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவுக்கே அடையாளமாக இருக்கும்.
இந்த நூலகத்தின் புகைப்படங்கள் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியா
Comments are closed.