பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மதுரை ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியதாவது, “உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் தைத் திங்களில் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் 15-ம் தேதி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலில் 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டை முனி வாசல் மந்தை திடலில் 17-ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெறவுள்ளது. வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே இந்த ஆண்டும் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பாலமேடு அருகே கட்டப்பட்டுள்ள புதிய மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வருடமும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் அந்தந்த வாடிவாசல் பகுதிகளிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தொகுப்பாளினியிடம் அத்துமீறிய ரசிகர்: கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் பரபரப்பு!