மழலையர் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். madurai collector order to cancelled summer camps
மதுரை கே.கே.நகரில் செயல்பட்டு வந்த மழலையர் பள்ளியில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
அதன்படி இன்று காலை பள்ளிக்கு சென்று விளையாடி கொண்டிருந்த 3 வயதான ஆருத்ரா என்ற சிறுமி, அங்கு மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், வழக்குப்பதிவு செய்த தல்லாக்குளம் காவல்நிலைய போலீசார் பள்ளி தாளாளர் திவ்யாவை கைது செய்தனர். மேலும் பள்ளி ஊழியர் உட்பட 4 ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, பள்ளிக்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் சிறுமி உயிரிழப்பு சம்பவம் எதிரொலியாக மதுரை மாவட்ட
ஆட்சித் தலைவர் சங்கீதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நர்சரி & பிரைமரி, தொடக்கப் பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளல் கோடை கால விடுமுறை நாட்களில் கண்டிப்பான முறையில் செயல்படக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
கோடைகால விடுமுறை நாட்களில் பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் உட்பட எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக்குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.