முன் ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 24) ஒத்திவைத்துள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
அப்போது எதிர்மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பதில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை தவறுதலாக குறிப்பிட்டதால் ஜாமீன் மனுவை திரும்ப பெற்று மீண்டும் புதிய ஜாமீன் மனு மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது நீதிபதி அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில், “உள்நோக்கத்தோடு த்ரிஷாவுக்கு எதிராக மன்சூர் அலிகான் பேசவில்லை. த்ரிஷா தரப்பில் இதுவரை எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை. தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு மன்சூர் அலிகான் கட்டுப்படுவார். அதனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், “மன்சூர் அலிகான் பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமலாக்கத்துறை சம்மன்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு!