தமிழ்நாட்டில் உள்ள 125 ஆறுகளின் பெயர்களையும் வைத்து ஒரு பாடலை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது மெட்ராஸ் ஐஐடி கல்வி நிறுவனம். madras iit give awarness song of tamilnadu rivers
கோடை வெயிலில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் தாங்காமல், எங்கேயாவது மலைவாசஸ்தலங்களுக்கு செல்லலாமா? எங்காவது தண்ணீர் வருகிற அருவி, ஆற்றில் குளித்து விட்டு வரலாமா? என்ற நிலை தான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் மனநிலை.
அவர்களின் மனதிற்கு குளிர்ச்சியூட்டும் விதமாக தமிழ்நாட்டில் ஓடும் 125 ஆறுகளின் பெயர்களை வைத்து ஒரு பாடலை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது மெட்ராஸ் ஐ ஐ டி கல்வி நிறுவனம்.
ஐ ஐ டி கல்வி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து International Centre for Clean Water (ICCW) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் நோக்கம் நமது பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பது ஆகும்.
ஆறுகளை, நீர்நிலைகளை பாதுக்காக்க வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் எத்தனை ஆறுகள் இருக்கின்றன? அதன் பெயர்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கான முயற்சியாக தமிழகத்தில் ஓடும் 125 ஆறுகளின் பெயர்களை பயன்படுத்தி, பாடல் எழுதி அதற்கு இசையமைத்துள்ளார் முன்னாள் ஐ ஐ டி மாணவரான டாக்டர் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன்.

மிகச்சிறந்த முறையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை பிரபல பாடகர்களான உன்னிகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீனிவாஸ் இணைந்து பாடியிருக்கிறார்கள். அவர்களுடன் இருவரின் மகள்களான உத்தாரா உன்னிகிருஷ்ணன், சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள்.
இந்த பாடல் மூலம் தமிழக ஆறுகளின் பெயரை எளிதாக நினைவு கூற முடியும் என்பதை தாண்டி, அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம் என்கின்றனர் இந்த ICCW அமைப்பினர்.
இதே அமைப்பு முன்னதாக பாம்பே ஜெயஸ்ரீ, அவரது மகன் அம்ரித் ராம்நாத், கௌஷிகி சக்ரவர்த்தி ரிஷித் தேசிகன் ஆகியோரின் குரலில் இந்தியாவில் ஓடும் ஆறுகளின் பெயர்களை வைத்து பாடல் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.