அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published On:

| By Selvam

அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம்  இன்று (மார்ச் 18) உறுதிசெய்துள்ளது.

அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார்.ஆனால்,  தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதன்பிறகு பிரதான வழக்கு நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெற்று வந்தது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், “ஓ.பன்னீர் செல்வம் இன்னும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் என்றே பதிவிட்டு வருகிறார், அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது.

கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஓ.பன்னீர் செல்வம் தற்போது வரை ஒருங்கிணைப்பாளராக சொல்லி வருகிறார். மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே தற்போதைய நிலையில் கட்சிக்கு சம்பந்தமில்லாத ஒரு நபர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அதிமுகவின் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை விதித்து நீதிபதி சதீஷ்குமார் இன்று தீர்ப்பளித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

CSK: விழுந்தது அடுத்த அடி… ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட வீரர்!

எஸ்.பி.ஐ வங்கியின் நடவடிக்கையில் அதிருப்தி… உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share