எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்துகொள்வார் என்று உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 23) உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 7 வழக்குகள் தொடரப்பட்டது. மே 12-ஆம் தேதி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுக்கு சங்கர் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மதியம் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
வழக்கு மீண்டும் மதியம் விசாரணைக்கு வந்தபோது, காவல் ஆணையர் தரப்பில் அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “சவுக்கு சங்கர் முதல்வரை ஒருமையில் பேசியிருக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்துகொள்வார், என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்று உத்தரவாதம் அளித்து பிரமாண மனுவை இன்று மாலையே தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் இறுதி விசாரணை நாளை நடைபெறும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மோகன்லாலுக்கு மரியாதையே கிடையாது” – நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஆவேசம்!