மணல் குவாரி தொழிலதிபர்கள் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 16) ரத்து செய்தது.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் கூறி, 2023 செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், வேலூர் என மணல் குவாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
புதுக்கோட்டையில் மணல் குவாரி தொழிலதிபரான எஸ்.ஆர் எனப்படும் ராமச்சந்திரன் கார்ப்பரேட் அலுவலகம், திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
இந்நிலையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரியும், சொத்து முடக்கத்தை நீக்க கோரியும் தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, அப்துல் சலீம் மற்றும் இளம்பாரதி, விஜய்மேகநாத் ஆகியோர் ஆஜரானார்கள்.
அவர்கள், “சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படவில்லை. எனவே இவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதமாகும். அமலாக்கத் துறையின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது” என வாதிட்டனர்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், “அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது. மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது” என்று குறிப்பிட்டு தொழிலதிபர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தனர்.
அவர்களது சொத்து முடக்கத்தை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இளவேனில் டூ மனு பாக்கர்… சூட்டிங்கில் பதக்கங்களை சுட காத்திருக்கும் இந்தியா