எடப்பாடியிடம் விசாரணை நடத்தலாம் : கோர்ட் அனுமதி!

Published On:

| By Kavi

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அதில், தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், “மனுதாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ இல்லை. வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. இந்த புகார் விசாரணைக்கு உகந்தது இல்லை” என்று வாதிடப்பட்டது.

ADVERTISEMENT

போலீஸ் தரப்பில், “சேலம் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுபடி, எடப்பாடி பழனிசாமி மீதான புகார் மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 22) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தலாம். இந்த விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share