காமன்வெல்த் சபாநாயகர்கள் பங்கேற்ற மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட இந்திய தேசியக்கொடியில் இடம்பெற்றிருந்த ‘மேட் இன் சீனா’ அச்சிட்டிருப்பது அவமதிப்பில்லையா?” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. டாக்டர் டி.ரவிக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆகஸ்ட் 22ம்தேதி தொடங்கி 26ம் தேதிவரை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பல மாநில சட்டமன்ற பேரவை தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாநாடு நடைபெற்ற வளாகத்தில், கலந்துகொண்ட சபாநாயகர்கள் தங்கள் நாடுகளின் கொடிகளை ஏந்திக்கொண்டு பேரணியாக வந்தனர்.
அதில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்கள் ஏந்தி வந்த கொடிகளில் ’மேட் இன் சீனா’ என அச்சிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தமது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், ”சீனாவின் பெயரோடு நம்முடைய தேசியக்கொடியை தாங்கிச் சென்றது வேதனையாக இருக்கிறது.
சீனாவில் இருந்து நாம் தேசியக்கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?” எனவும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
தேசியக் கொடியில் சீனா பெயர் இடம்பெற்றதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. டாக்டர் டி.ரவிக்குமாரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், இன்று (ஆகஸ்ட் 27) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”தேசியக் கொடியின்மீது எழுத்துகள் அச்சிடுவது அதை அவமதிப்பதாகும் என Prevention of Insults to National Honour Act,1971 Section 2 இல் விளக்கம் தரப்பட்டுள்ளது.
தேசியக் கொடியில் Made in China என அச்சிட்டிருப்பது அவமதிப்பில்லையா? ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்குமா?” என கேள்விகளைத் தொடுத்துள்ளார் ரவிக்குமார்.
ஜெ.பிரகாஷ்
ஒரே இரவில் தமிழகத்தில் 100 கோடி கொடிகளை தயாரிக்கலாம் : மேட் இன் சைனா சர்ச்சை குறித்து அப்பாவு