பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கதாநாயகியாக கீர்த்திசுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் .
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த மே 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடலை பலரும் கொண்டாடி வருகின்றனர். படத்தின் மற்றொரு பாடலான ‘ஜிகுஜிகு ரயில்’ பாடல் மே 27-ம் தேதி வெளியானது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார்.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூன் 1) நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

பிம்பத்தை உடைத்த உதயநிதி, அருள்நிதி
தமிழ் சினிமாவில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் வெற்றிபெற்றதில்லை. மறைந்த முதல்வர் மு.கருணாநிதி தனது மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அவரை வெற்றிகரமான கதாநாயகனாக்க முடியவில்லை. ஆனால் அவரது பேரன்கள் அருள்நிதி, உதயநிதி ஸ்டாலின் இருவரும் தமிழ் சினிமாவில் தங்கள் இருப்பை உறுதிசெய்யக்கூடிய வகையில் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்கள்.
2012-ஒரு கல் ஒரு கண்ணாடி, திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். அதனை தொடர்ந்து கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து , மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, கண்ணை நம்பாதே, நெஞ்சுக்கு நீதி என 13 திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வணிக அடிப்படையில் ஒரு கல் ஒரு கண்ணாடி, சைக்கோ என இரண்டு படங்கள் மட்டுமே பெரும் வெற்றியை பெற்றது.
தற்போது உதயநிதி ஸ்டாலின் முழு நேர அரசியல்வாதி, அமைச்சர் என ஆகிப்போனதால் மாமன்னன் படம்தான் அவர் நடிக்கும் கடைசிப் படம் என முன்னிறுத்தப்படுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நெல்லை ஜாதி அரசியலை பேசிய கர்ணன்!
அத்துடன் பரியேறும் பெருமாள் படத்தில் ஜாதி அரசியல் பேசிய மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டாவது படம் கர்ணன் இந்தப் படத்தில் முன்னணி நடிகரான தனுஷ், மலையாள லால், மஞ்சுவாரியார் நடித்திருந்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி ஏரியா அரசியல் – ஜாதியை பற்றி பேசிய கர்ணன் வணிக அடிப்படையில் வெற்றிபெற்றதுடன் தமிழ்சினிமாவில் ஆக சிறந்த படைப்புகளில் ஒன்றாக இடம்பிடித்துவிட்டது.

எந்த அரசியலை காட்டப்போகிறார் மாரி?
மாரிசெல்வராஜ் தற்போது இயக்கியுள்ள மாமன்னன் தமிழகத்தின் மேற்கு மாவட்ட அரசியல் பற்றிய படம் என அவரே கூறியிருப்பதன் மூலம் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் அரசியல் ரீதியான படங்களுக்கு தோல்வி என்பது இருந்தது இல்லை. குறைந்தபட்ச வெற்றியாவது கிடைத்துவிடும். தமிழக அரசியல் வரலாற்றில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திமுக, அதிமுக இக்கட்சிகளை தவிர்த்துவிட்டு அரசியல் படங்களுக்கான திரைக்கதை எழுத முடியாது.
தமிழக அரசியல் களத்தில் 1977 க்கு பின்னர் மேற்கு மாவட்டங்கள் அதிமுக ஆட்சியில் அமரவே பெரும்பான்மையான தேர்தல்களில் ஆதரவு கொடுத்து வந்துள்ளன. இதனால் மேற்கு மாவட்ட அரசியல் முக்கியத்துவம்மிக்கதாக உள்ளது. அதே போன்று பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டங்களை வீரியத்துடன் கம்யூனிஸ்டுகள் தலைமேயேற்று நடத்தியதும் மேற்கு மாவட்டத்தில்தான்.
தமிழக அரசியலில் எப்போதும் முக்குலத்தோர் சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகம். அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரது நிழலாக இருந்த சசிகலாவின் உதவியுடன் முதல்வராக அமர்ந்த எடப்பாடி கே.பழனிச்சாமி ஒரு கட்டத்தில் சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் இருந்து அப்புறப்படுத்தி ஆட்சியை நான்கு ஆண்டு காலம் நிறைவு செய்ததுடன் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்.
இதில் எந்த அரசியலை மாரி செல்வராஜ் சொல்லப்போகிறார். எந்த அரசியலை பேசியிருந்தாலும் அதில் திமுகவை விமர்சிக்காமல் கடந்து போக முடியாது. இதனை மாரி செல்வராஜ் திரைக்கதையில் எப்படி கையாண்டுள்ளார் என எதிர்பார்க்கபடுகிறது.

மாமன்னன் பார்த்துவிட்டேன்!
நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் கமல்ஹாசன் ‘படத்தை நான் பார்த்துவிட்டேன். தமிழக மக்களின் ஒவ்வொருவரது வாழ்க்கையுடன் சம்பந்தபட்டது’ என கூறியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எல்லோராலும் கனெக்ட் பண்ண முடியும்!
படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குவதற்கு முன்பு பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்,
“படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட். வித்தியாசமான படமாக எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். பொதுவான ஒரு விஷயத்தைப்பற்றி தான் பேசியுள்ளோம். எல்லோராலும் கனெக்ட் பண்ண முடியும். ஃபஹத் பாசிலுடன் எனக்கு காம்பினேஷன் குறைவு. உதயநிதி, வடிவேலுவுடன் இணைந்து நடித்தது ஜாலியாக மகிழ்ச்சியாக இருந்தது. நிறைய டேக் போனோம். நிறைய சிரித்துக்கொண்டே இருந்தோம். ஜாலியான பயணமாக இருந்தது. ஆனால் படம் அப்படியிருக்காது. சீரியஸான படமாக இருக்கும்” என கூறியுள்ளார்.
இதனால் எந்த மாதிரியான அரசியலை மாமன்னன் படத்தில் பேசப்போகிறார், வடிவேலு எந்த அரசியல் கட்சி தலைவரை ஞாபகப்படுத்தப்போகிறார் என்பதாலேயே மாமன்னன் தமிழ் சினிமாவில் முதன்மை படமாக மாற்றம் கண்டுள்ளது.
இராமானுஜம்