தமிழக மாநிலங்களவை எம்.பி-கள் 6 பேர் இன்று (ஜூலை 24) ஓய்வு பெறும் நிலையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. M.M.Abdulla made his final request for Hindus
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த மு.சண்முகம் என்.சந்திரசேகரன், அன்புமணி ராமதாஸ், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியோரின் பதவி காலம் இன்றுடன் (ஜூலை 24) நிறைவடைகிறது.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த பி.வில்சன் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஓய்வு பெறும் எம்.பி க்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது.
அப்போது பேசிய எம்.எம். அப்துல்லா, ”நான் பணியாற்றிய காலம் குறுகிய காலமாக இருந்தாலும் கூட எனக்கு கிடைத்த அனுபவங்களும், வாய்ப்புகளும் மிக மிக அதிகம். அதைவிட இங்கு அனைவரிடமும் நான் பெற்ற அன்பு மிக மிக அதிகம். தமிழகத்தின் கடைக்கோடியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன். தூரத்திலிருந்து நான் பார்த்து வியந்த தலைவர்கள் உடனெல்லாம் நெருங்கி பழகுகின்ற வாய்ப்பை இந்த அவை தந்தது. அரசியலையும், அரசாங்க நடைமுறைகளையும் தேசிய அளவில் ஒரு பரந்துபட்ட பார்வையோடு எப்படி அணுகுவது என்ற அனுபவத்தை இந்த அவை தான் எனக்கு கற்றுத்தந்தது” என்றார்.
மேலும், “தமிழகத்தின் திண்டுக்கல்-பழனி வழியில் கணக்கம்பட்டி என்ற கிராமத்தில் பழனிசாமி என்கிற மகான் ஒருவர் வாழ்ந்து மறைந்த நிலையில் அவரது நினைவாக கட்டப்பட்ட கோயில் உள்ளது. அங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அந்த பக்தர்கள் பயனடையும் வகையில் அங்கு தனி ரயில் நிலையம் அமைக்க வேண்டும்” என்று கோரிக்கையை நிறைவாக முன் வைத்தார்.
ஒருபோதும் நிறுத்தமாட்டேன்!
இதேபோல் 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வைக்கோ இன்று நடந்த பிரிவு உபச்சார விழாவில் பேசியபோது, “என்னை முதன்முதலாக மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கு நன்றி. திமுக நாடாளுமன்ற தலைவராக இருந்த முரசொலி மாறனால் வார்த்தெடுக்கப்பட்டேன். சோனியா காந்தி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரது உரைகளை கேட்க வாய்ப்பு கிடைத்தது. ஈழத்தமிழருக்காக 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். என்.எல்.சி.யை தனியார் மயமாக்காமலை தடுத்திருக்கிறேன். தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்” என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார். தொடர்ச்சியாக ஓய்வு பெறும் உறுப்பினர்கள் தங்கள் உரையை நிகழ்த்தினர்.
