தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கிய நிலையில், இன்று (ஏப்ரல் 1) திருச்சியில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இதே திருச்சியில் மாபெரும் மாநில மாநாட்டிற்காக வந்த அவர், இப்போது மீண்டும் தமது கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளார். கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவது மாதிரி, திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா?” என்று கூட்டத்தினரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தினர் “தயார்” என்று முழக்கமிட்டனர். பின்னர் ஸ்டாலின் “நன்றி” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “2021 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியைத் தந்தீர்கள். அதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு இரண்டு சிறப்பான அமைச்சர்களை நீங்கள் தந்திருக்கிறீர்கள். இந்த முறையும் திருச்சியில் 100 சதவீத வெற்றியைத் தருவீர்களா?” என்று கேட்டார்.
திருச்சி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரிய ஸ்டாலின்:
திருச்சி மேற்கு தொகுதி: கழகத்தின் முதன்மைச் செயலாளர் ஆருயிர் சகோதரர் கே.என்.நேரு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும்.
திருவெறும்பூர் தொகுதி: அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
திருச்சி கிழக்கு தொகுதி: இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
லால்குடி தொகுதி: பாரி வள்ளல் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும்.
மணச்சநல்லூர் தொகுதி: கதிரவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.
திருவரங்கம் தொகுதி: எஸ்.துரைராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை வழங்க வேண்டும்.
மணப்பாறை தொகுதி: மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த அப்துல் சமது அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தர வேண்டும்.
முசிறி தொகுதி: கருணை ராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை வழங்க வேண்டும்.
துறையூர் தொகுதி: கூட்டணி கட்சியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு (விரைவில் அறிவிக்கப்பட உள்ளார்) கைச்சின்னத்தில் வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒன்பது வேட்பாளர்களுக்கும் பொன்னான வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் அன்புடனும், பண்புடனும், பாசத்துடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
பின்னர், “வெற்றி உறுதியா?” என்று கேட்டதற்கு கூட்டத்தினர் “உறுதி” என்று முழக்கமிட்டனர். அதையடுத்து வேட்பாளர்கள் தங்கள் இருக்கையில் அமரலாம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சிக்கான சாதனைகள்:திருச்சிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு முத்திரைத் திட்டங்களை செய்திருப்பதாகவும், அவற்றை விரிவாகச் சொல்ல நேரம் இல்லை என்றும், கொடுமையான வெயிலில் காத்திருக்கும் மக்களைப் பார்த்து சுருக்கமாகத் தெரிவித்தார்.
திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் , அதற்கு அருகில் பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம், திருவரங்கம் மற்றும் லால்குடியில் புதிய பேருந்து நிலையங்கள். திருச்சி மாவட்டத்தில் மட்டும் 327 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி பேசினார்.
