பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பும் ரொக்கமும் வழங்கப்பட உள்ள நிலையில், சென்னை ஆலந்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பயனாளிகள் அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பையும் ரொக்கத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதற்கான டோக்கன் விநியோகம் கடந்த திங்கள் அன்று தொடங்கியது. நியாயவிலைக் கடைபணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகித்தனர். இதுதவிர, கடைகளுக்குப் பொருட்கள் வாங்க வருவோரிடமும் டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “இந்த பொங்கல் மகிழ்ச்சி பொங்கல் ! வெல்வோம் ஒன்றாக என குறிப்பிட்டுள்ளார்.
