தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) காலை திருவண்ணாமலை தேரடி வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது மார்க்கெட் பகுதியில் இருந்த வியாபாரிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்து காய்கறி மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினர். மேலும் அங்கு இருந்தவர்கள் முதல்வருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அங்கிருந்த பொதுமக்களிடம் திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் எ.வே.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். முதல்வருடன் அங்கிருந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,”திருவண்ணாமலையின் விடியலில் பெற்றவை:
குழந்தையின் முத்தம், குவளை தேநீர், தொழிலாளத் தோழர்களின் வாஞ்சை, ஆன்மீக அன்பர்களின் பாராட்டு, மாணவர்களின் உற்சாகம், பெண்களின் பேராதரவு!
இவர்களை மீறி நம்மை வெல்பவர் யார்!”என தெரிவித்துள்ளார்.
