கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் நாளை (ஜனவரி 30) முதல் இனி கோயம்பேடுக்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோயம்பேடு பேருந்து நிலையம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லுலு நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பாமக, தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோயம்பேட்டில் ’லுலு மால்’ என்பது முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தைக் காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு தரப்போவதாகப் பலரும் வதந்தி பரப்புகின்றனர்.
அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி, அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதித்துறைச் செயலாளர் சமயமூர்த்தி ஐஏஎஸ், “மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உயர்கல்வியில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஆர்எஸ்எஸ் – பாஜக சதி: ராகுல்