தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் நேற்று (நவம்பர் 25) இரவு பிரபாகரன் 68-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 1954-ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வல்வெட்டித்துறையில் பிறந்தார்.
1972-ஆம் ஆண்டு பிரபாகரன் தனது 18-ஆம் வயதில் புதிய தமிழ் புலிகள் என்ற இயக்கத்தை துவங்கினார்.

பின்னர் 1976-ஆம் ஆண்டு புதிய தமிழ் புலிகள் என்ற இயக்கத்தை தமிழீழ விடுதலை புலிகள் என்று பெயர் மாற்றினார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திய அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் பிரபாகரன் ஈடுபட்டார்.
2006-ஆம் ஆண்டு விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை சிங்கள ராணுவம் கைப்பற்ற துவங்கியது.
இதனால், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டார்.
பிரபாகரன் பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள், மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றன. மேலும், பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “வரலாற்றுப்பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக, முகவரியாக என எல்லாவுமாக விளங்குகிற நமது தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 68 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமித உணர்வும் அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகர் பிறந்தநாளை மாவீரர் நாளாக கொண்டாடுகின்றனர். குருதிக்கொடை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ராயப்பேட்டையில் நேற்று நள்ளிரவில் பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பார் உள்ளிட்டோர் கேக் வெட்டி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாட்டுக் கறி விருந்து வழங்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவீரர் நாள் சென்னை அம்பேத்கர் திடலில் இன்று காலை 10.30 மணியளவில் கொண்டாடப்படுகிறது.
செல்வம்