தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மே 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே 2) சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்,
“தமிழக பகுதிகளில் தற்போது வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது மேலும் தென்னிந்தியாவை ஒட்டிய கடல் பகுதிகளில் கிழக்கிலிருந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடிய ராஷ்பி வேவ்ஸ் நகர்ந்து செல்வதாகவும் மேற்கிலிருந்து கிழக்காக நகர்ந்து செல்லக்கூடிய எம்ஜேஓ நிகழும் நிகழ்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும், 13 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. மேலும் வருகின்ற மே 6 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி அது 7அல்லது 8 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகக் கூடும். அது தொடர்ந்து கண்காணிக்கக்கூடும்” என்றார்.
தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டத்தில் மிக கனமழையும், 24 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 3) நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா – தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா