வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக லேனாது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மணலியில் 6 செமீ மழையும், செங்குன்றத்தில் 4 செமீ மழையும் பெய்துள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
13 -ஆம் தேதி வாக்கில் (நாளை) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் சற்று வலுவடையக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (12-08-2025) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவைலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-08-2025: திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14-08-2025 முதல் 18-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
