ADVERTISEMENT

பிளம்ஸ் விளைச்சல் பாதிப்பு: வியாபாரிகள், விவசாயிகள் கவலை!

Published On:

| By admin

கொடைக்கானலில் கடந்த சில வருடங்களாக விளைச்சல் குறைந்து, தரமற்ற பிளம்ஸ் பழங்கள் கிடைத்து வருவதால் வியாபாரிகளும் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெரும்பாலான தோட்டங்களில் அதிகப்படியான ஊடுபயிராக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் பிளம்ஸ் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பிளம்ஸ் பழங்களை கொடைக்கானல் வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்கி செல்வதுண்டு.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பிளம்ஸ் விளைச்சல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏப்ரல் மாதம் பிளம்ஸ் சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரை நன்கு விளையும். ஆனால், கொடைக்கானலில் நிகழாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பிளம்ஸ் மரங்களிலிருந்த பூக்கள் குறையத் தொடங்கின.

மேலும் கடந்த சில வருடங்களாக பிளம்ஸ் பழங்களில் கரும்புள்ளி நோய் தாக்க ஆரம்பித்தது. இதனால் விளைச்சல் குறைந்து, தரமற்ற பிளம்ஸ் பழங்களே கிடைக்கின்றன. இந்த பிளம்ஸ் பழங்கள் கிலோ ரூ.200-க்கு கடைகளில் விற்பனை செய்யப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனா். இதனால் பிளம்ஸ் பழங்களின் விற்பனை சரிந்ததால் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், பிளம்ஸ் பழங்களின் விளைச்சலை மீட்டெடுக்க தோட்டக்கலைத்துறை மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு காரணங்களால் பிளம்ஸ் விளைச்சல் குறைந்து வருவதால் இதை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share