தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (அக்டோபர் 24) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக அதிக வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்தது. அது வட தமிழக உட் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
அதே வேளையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.
இதனையடுத்து, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு நாளை அக்டோபர் 25 ஆம் தேதி முதல் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சில வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தாழ்வுப் பகுதி உருவான பின்னரே அதன் நகர்வு மற்றும் வலுவடைதல் குறித்த தெளிவான தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
