சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய 457கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது, மேலும் கடந்த 2009 – 2010 காலக்கட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்திருப்பதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பல்வேறு கட்டங்களாக அவர் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே, மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்திருக்கும் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
சோதனையின் முடிவில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய 457 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
குறிப்பாக இருப்புத் தொகை, முதலீடு தொகை, அசையும் மற்றும் அசையா சொத்துகள் என 457கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மார்ட்டினுக்கு தொடர்புடைய மொத்தம் 908கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
