மத்திய அரசு கொண்டு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா எனப்படும் குற்றவியல் சட்டங்களில் கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீசிடம் தெரிவிக்காமல் தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த இரு தினங்களாக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாநிலங்களில் லாரிகளை இயக்காமல் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் மத்திய அரசின் புதிய சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேக்ரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அஜ்மர் – பில்வாரா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் சென்ற போது, ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் 3 போலீசார் காயமடைந்ததாகவும் கேக்ரி நகர காவல் நிலைய அதிகாரி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மூ காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி உள்ளிட்ட பகுதிகளிலும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி டிரைவர் ஒருவர் கூறுகையில், “இந்த புதிய சட்டத்திருத்தத்தை தினசரி தினக்கூலிகளாக வேலைக்கு செல்லும் ஓட்டுநர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதுபோன்று சட்டம் இயற்றுவதற்கு முன்னதாக எங்களை போன்றவர்களை யோசித்து பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த வேலை நிறுத்தத்தால் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பல இடங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. “90 சதவிகித பங்குகளில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது. யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளுக்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் 1,500 டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அடுத்த சில மணி நேரங்களில் அனைத்துப் பங்க்குகளிலும் எரிபொருள் தீர்ந்துவிடும்” என ஜம்மூ காஷ்மீர் பெட்ரோல் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் பெட்ரோல் இருக்கும் பங்க்குகளுக்கு வாகன ஓட்டிகள் படையெடுத்துள்ளனர். பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்காக வரிசையில் நிற்கும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகுகின்றன.
மகாராஷ்டிரா
மும்பை, நாக்பூர், சோலாப்பூர், தாராஷிவ், நவி மும்பை, பால்கர், நாக்பூர் என மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டீலர்கள் மற்றும் நுகர்வோருக்கு கொண்டு செல்ல முடியாததால் பல இடங்களிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் பங்க்குகளுக்கு முன், எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணமுடிகிறது.
பீகார், குஜராத், பஞ்சாப், ஹரியானா என பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெறவில்லை. என்றாலும், தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு சென்றுள்ள ஓட்டுநர்கள் அங்கு சிக்கியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழக ஓட்டுநர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “மத்திய அரசின் சட்டத்தை கண்டித்து இங்கிருக்கும் லாரி அசோஷியேசன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இங்கு வந்து சிக்கிக்கொண்டோம். முன்னால் 50 வண்டிகள், பின்னால் 50 வண்டிகள் நிற்கின்றன. தண்ணீர் வசதி, கடை வசதி இல்லாத இடத்தில் நிற்கிறோம். வண்டியை எடுத்தால் உள்ளூர் ஓட்டுநர்கள் அடித்து நொறுக்குகிறார்கள். இதற்கு ஒரு தீர்வு ஏற்பட வேண்டும்.
இவ்வளவு கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்த போவதில்லை. 10 ஆண்டு சிறை லட்சக்கணக்கில் அபராதம் என்றால், நாங்கள் என்ன செய்வது” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்பேரில் மத்திய உள்துறை அலுவலகத்துக்கு சென்றுள்ள அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தனுஷ் – சிவராஜ் குமார் டான்ஸ்: கேப்டன் மில்லர் புது பாடல்!
அரசு கட்டுமான ஒப்பந்த நிறுவனங்களில் 8 மணி நேரமாக தொடரும் ஐடி ரெய்டு!
Comments are closed.